பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 23-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் இரு முக்கிய தலைவர்களான டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கும், பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கும் இடையிலான உறவில் முட்டல், மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரு தலைவர்களுக்கு இடையில் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு இடையில் பனிப் போர் நடந்து வருவதாக அக்கூட்டணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக்கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் பிப்ரவரி 14 ஆம் தேதி , முகைதீன் வீட்டில் நடைபெற்ற இரு தலைவர்களுக்கு இடையிலான சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பெரிக்காத்தானுக்கு தலைமையேற்கப் போவது பெர்சத்து கட்சியைச் சேர்ந்த தலைவரா? பாஸ் கட்சியைச் சேர்ந்தவரா என்ற தலைமைத்துவப் போராட்டமும் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியை தற்காக்கப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்த முகைதீன், அந்த உறுதி மொழியிலிருந்து திடீர் பல்டி அடித்தது, பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பிரதமர் வேட்பாளராக திரெங்கானு மந்திரி பெசார் அஹ்மாட் சம்சூரி மொக்தார் என்று பாஸ் கட்சி பகிரங்கமாக அறிவித்தது மற்றும் ஆகக்கடைசியான அரசியல் நிலவரங்கள் ஆகியவை இரு தலைவர்களுக்கு இடையில் நடந்து வரும் பனிப்போர் தற்போது பரவலாக தெரியத் தொடங்கியிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது பெரிக்காத்தான் நேஷனலில் உள்ள இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கி வருவதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.