சுங்கத்துறை உறுப்பினர்கள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அம்பலமாகியுள்ள விவகாரத்தைத் தொடர்ந்து, குடிநுழைவுத்துறை, உள்நாட்டு வருமான வாரியம் முதலான நிறுவனங்கள் மிக நெருக்கமாக கண்காணிக்கப்படுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நெருக்கமாக கண்காணிப்பதன் வழி, அதன் பொறுப்பற்ற தரப்பினரின் நடவடிக்கைகளை களைய முடியும். நிதியமைச்சகத்தின் கீழ் சுங்கத்துறை இருப்பதால் அதிலுள்ள உறுப்பினர்கள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது தமது மனதை நொறுங்கச் செய்வதாக, பிரதமர் கூறினார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய கார்கோ-வில் 4.7 மில்லியன் வெள்ளி மதிப்பிலான கையூட்டைப் பெற்று சுமார் 34 சுங்கத்துறை உறுப்பினர்கள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த வாரம் அம்பலப்படுத்திருந்தது.
கடந்த 3 ஆண்டுகளில், அத்தரப்பினரின் அந்நடவடிக்கைகளால் நாட்டிற்கு 2 பில்லியன் வெள்ளி நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஜாம் பாக்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.