கோலாலம்பூர் மாநகரில் ஜாலான் சிலாங்கில் கடந்த வாரம் வியாழக்கிழமை சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட மிகப்பெரிய சோதனை நடவடிக்கையின் போது ஒரு கடையில் சோதனையிடுவதைப் போல 85 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை திருடியதாக மூன்று போலீஸ்காரர்கள், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
35 வயது முகமது அடிப் முகமட் ஜாஃப்ரி, 26 வயது முகமது அமிருல் அய்மான் மாமத், 30 வயது முஹம்மது ஹபீஸ் இர்ஸ்யாத் என்ற அந்த மூன்று போலீஸ்காரர்களும் மாஜிஸ்திரேட் ஐனா அசாஹ்ரா ஆரிஃபின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி பிற்பகல் 2.27 மணியளவில் ஜாலான் புடு, ஓஃப் ஜாலான் சிலாங் கில் உள்ள கட்டடத்தின் முதலாவது மாடியில் NGWE Gabar Sdn. Bhd. என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கடையில் கள்ளாப் பெட்டியிலிருந்து இந்த மூன்று போலீஸ்கார்களும் 85 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை திருடியது, அங்கு பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த களவாடல் சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர், போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த மூன்று போலீஸ்காரர்களும் பிடிபட்டனர்.