திரெங்கானு, மே 23-
திரெங்கானு, சுக்காய்-யிலுள்ள கெலிகா கடலுக்கு அருகாமையில் மூழ்கியிருந்த கப்பலில் இரும்புகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த முக்குளிப்பாளர் ஒருவர் நீரினுள் சிக்கி உயிரிழந்தார்.
நேற்று மாலை மணி 4.45 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 25 வயதுடைய முஹம்மது அய்மான் ஜாம்ப்ரி என அடையாளம் கூறப்பட்டது.
தொடக்கத்தில், தனது நண்பரான 40 வயது சுக்ரில் அமான் ரபிலாலிம் ஏ ராணி-யுடன் இணைந்து கடலுக்கடியிலுள்ள கப்பலில் வெட்ட வேண்டிய இரும்பு பகுதிகளைக் குறிக்கும் பணியில் அவ்விருவரும் ஈடுபட்டதாக கெமாமன் மாவட்ட போலீஸ் தலைவர் மேற்பார்வையாளர் ஹன்யான் ரம்லான் கூறினார்.
நீருக்கடியில், அவர்களது ஆக்ஸிஜன் குழாய்களும் கயிறுகளும் சிக்கிக்கொண்ட நிலையில், சுக்ரில் அமான் அதிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொண்டுள்ளார்.
ஆனால், அய்மான் ஜாம்ப்ரி நீரின் மேற்பரப்புக்கு வராததால், சுக்ரில் அமான் மீண்டும் நீரினுல் சென்று பார்த்த போது, அவர் சுயர்நினைவு இன்றி கிடந்துள்ளார். பின்னர், அவரை மீட்டு தரைக்கு கொண்டு வந்த போது, அய்மான் ஜாம்ப்ரி உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.
பின்னர், சடலம் உடற்கூறு ஆய்வுக்காக, கெமாமன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஹன்யான் ரம்லான் கூறினார்.