பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 13-
கடந்த மார்ச் 20 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, டாமான்சாரா-வில் ஒரு பேரங்காடி மையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் பாதுகாவலரால் கண்டு பிடிக்கப்பட்ட 5 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான பணம் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டு இருந்த பணப்பெட்டி தொடர்பில் மேலும் மூன்று நபர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் வாசிகளான அந்த மூன்று பேரும், அடுத்த வாரம் சாட்சியம் அளிப்பர். அந்தப் பணப்பெட்டி தன்னுடையதான் என்று ஏற்கனவே அறிவித்துள்ள வெட்டுமர நிறுவனம் ஒன்றின் இயக்குநரின் நண்பர்களாக அந்த மூன்று பேரும் விளங்குகின்றனர்.
அவர்கள் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையத்தில் சாட்சியம் அளிப்பர் என்றுடத்தோ ஹுசைன் ஓமார் குறிப்பிட்டார்.
அந்தப் பணப்பெட்டி தொடர்பாக அந்த வெட்டுமர நிறுவனத்தின் இயக்குநர் கடந்த மார்ச் 30 ஆம் தேதி போலீசிடம் வாக்குமூலம் அளித்ததுடன் அந்தப் பணப்பெட்டி தனக்கு சொந்தமானதாகும் என்று உரிமைகோரியதாக டத்தோ ஹுசைன் ஓமார் குறிப்பிட்டார்.
முதலீடு செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு தம்மிடம் கடன் வாங்கிய நண்பரின் வீட்டிலிருந்து அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வரும் போது எதிர்பாராத விதமாக அதனை தவறவிட்டதாக அந்த இயக்குநர் தனது சாட்சியித்தில் கூறியிருந்ததாக டத்தோ ஹுசைன் ஓமார் தெரிவித்து இருந்தார்.