ஈப்போ, ஏப்ரல் 19-
பேராக், ஈப்போ, ராஜா பெர்மை சூரி பைனுன் மருத்துவமனையில், பாலியல் தொந்தரவுகளுக்கும் மிரட்டல்களுக்கும் இலக்கானதாக கூறப்படும் மருத்துவ பணியாளர்கள் அது குறித்து போலீசில் புகாரளிக்கும்படி, மாநில சுகாதார துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் விசாரணைக்கு உதவக்கூடிய ஆதாரம் மற்றும் சாட்சிகளை கட்டாயம் முன்வைக்க வேண்டுமென அம்மாந்நில சுகாதார துறையின் இயக்குநர் டாக்டர் பெய்சுல் இட்ஸ்வான் முஸ்தபா தெரிவித்தார்.
இதற்கு முன்பு, மருத்துவ பணியாளர்கள் பாலியல் தொந்தரவுக்கு இலக்காவதாக வெளியாகியிருந்த மொட்டை கடிதம் குறித்து சுகாதார அமைச்சின் உயர்நெறி பிரிவு விசாரணையை மேற்கொண்டு அறிக்கையை தங்களிடம் தாக்கல் செய்துள்ளது.
இருந்த போதிலும், பணியிடங்களில் பாலியல் தொந்தரவு அற்ற சூழலை ஏற்படுத்தும் இலக்கில், பாதிக்கப்பட்ட தரப்பினர் அது குறித்து போலீசில் புகாரளிப்பது அவசியம்.
அது தவிர, பணியிட பகடிவதை சம்பவங்களால் பாதிக்கப்படும் பணியாளர்கள், MyHelp KKM எனும் அமைச்சின் அகப்பக்கத்தில் புகாரளிக்கலாம் என டாக்டர் பெய்சுல் இட்ஸ்வான் கூறினார்.