கிளந்தான் மாநிலத்தின் 2019 ஆம் ஆண்டின் ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் 18 ஆவது விதியை ரத்து செய்வதற்கு சவால் விடும் வகையில் அந்த மாநில சட்டத்திற்கு எதிராக இரண்டு முஸ்லிம் பெண்கள் தொடுத்துள்ள வழக்கில் முக்கியத் தீர்ப்பை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் நாளை வெள்ளிக்கிழமை வழங்கவிருக்கிறது.
நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நீதிபதிகள் குழுவினர் இந்த வரலாற்றுப்பூர்வமான தீர்ப்பை வழங்கவிருக்கின்றனர்.
தகாத உறவு, சூதாட்டம், ஓரினப்புணர்ச்சி, பாலியல் தொல்லை என பல்வேறு குற்றச்செயல்களுக்கு கிளந்தான் மாநிலத்தில் ஷரியா சட்டத்தின் 18 ஆவது விதியின் கீழ் அளிக்கப்படும் தண்டனையானது, கூட்டரசு அரசிலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் அக்குற்றங்களுக்கு கிளந்தான் மாநில சட்டத்தை விட கூட்டரசு நீதிமன்றத்தின் அரசியல் சட்டமே பிரதானமானதாகும் என்றும், கிளந்தான் மாநில சட்டத்திற்கு சவால் விடும் வகையில் அந்த இரு முஸ்லிம் பெண்களும் அரசமைப்பு சட்டத்தின் தெளிவுரை கேட்டு இந்த வழக்கை தொடுத்துள்ளனர்.
குறிப்பாக, கிளந்தான் ஷரியா சட்டத்தின் 18 ஆவது விதி, அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று அறிவிக்கக் கோரி அந்த இரு பெண்களும் இந்த சட்டப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். .