கோத்தா திங்கி, ஏப்ரல் 13-
மைவி காரும், டெங்கர் லாரியும் மோதிக்கொண்ட சாலை விபத்தில் காரில் பயணித்த மாதுவும், அவரின் பெண் குழந்தையும் உயிரிழந்த வேளையில் மேலும் ஓர் ஆணும், ஒரு சிறுமியும் படுகாயத்திற்கு ஆளாகினர்.
இவ்விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி, தாமான் ஸ்ரீ பேனாவார் அருகில் ஜாலான் தஞ்சுங் பாலாவு-பண்டார் பேனாவார்-ரில் நிகழ்ந்தது. காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட மாதுவும், அவரின் குழந்தையும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சுங்கை ரெங்கிட் தீயணைப்பு, மீட்பு நிலைய முதிர்நிலை அதிகாரி கொமாண்டர் அஸ்லான் மாட் சனி தெரிவித்தார்.
இருவரின் உடல்களையும் மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் RTA என்ற பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். காயம் அடைந்த ஆடவரும், ஒரு சிறுமியும் அம்புலன்ஸ் வண்டியின்மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.