சபா, ஜாலான் செம்போர்னா-விலிருந்து தவௌ-விற்கு செல்லும் 21 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் மூன்று வாகனங்கள் மோதி கொண்டதில் இரண்டு சுற்றுப்பயணிகள் உயிரிழந்த வேளையில் ஐவர் படுங்காயங்களுக்கு ஆளாகிய சம்பவம் தொடர்பாக டிரெய்லர் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிரெய்லர் லாரி, சுற்றுலா பேருந்து உட்பட மற்றொரு லாரி விபத்துக்குள்ளாகிய சம்பவம் குறித்து விசாரணைக்கு உதவும் வகையில் 29 வயதுடைய அந்த டிரெய்லர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக செம்போர்னா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ட் முகமது ஃபர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 -யின் பிரிவு 41 கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அதிகபட்சம் 50,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும் என்று முகமது ஃபர்ஹான் கூறினார்.
சந்தேகிக்கும் டிரெய்லர் ஓட்டுநர் ஓட்டிச் சென்ற லாரி வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி தள்ளியதாக நம்பப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்துக் குறித்து சாட்சியங்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் குறிப்பிடப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு முகமது ஃபர்ஹான் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.