ஜொகூர் பாஹ்ருவெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமாரும் ஒரு மின் அஞ்சலை பெற்றுள்ளார். இந்த வெடிகுண்டு மிரட்டல் மின் அஞ்சல், ஜோகூர் மாநில போலீஸ் தலைவரின் அதிகாரப்பூர்வ மின் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜோகூர்பாரு, புக்கிட் சென்யுமில் உள்ள ஜோகூர்பாரு மாநகர் மன்ற கட்டடத்திற்கு நேற்று காலையில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் மின் அஞ்சலை அனுப்பிய அதே நபர்தான், மாநில போலீஸ் தலைவர் என்ற முறையில் தமக்கும் அனுப்பியிருப்பதாக நம்பப்படுகிறது என்று கமிஷனர் எம். குமார் குறிப்பிட்டார்.
மின் அஞ்சலை அனுப்பிவைத்த நபரின் முகவரியை சோதனை செய்த போது,ஜோகூர்பாரு மாநகர் மன்ற கட்டடத்திற்கு மின் அஞ்சலை அனுப்பி வைத்த அதே நபரின் முகவரியிருந்துதான் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் தமக்கும் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக கமிஷனர் குமார் தெரிவித்தார்.
எனினும் சம்பந்தப்பட்ட நபர் பயன்படுத்திய மின் அஞ்சல் கணக்கு போலியானது என்று குமார் குறிப்பிட்டார்.
மின் அஞ்சலை அனுப்பி வைத்த நபரின் உண்மையான அடையாளத்தை காணும் முயற்சியில் ஜோகூர் போலீசார் ஈடுபட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.