கூலிம், ஏப்ரல் 25-
கெடா, கூலிம், தாமான் டேச ஆமானில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வயோதிகர் ஒருவரை கீழே தள்ளி பிரம்பினால் சரமாரியாக அடித்து சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் ஓர் இந்திய பெண்ணும் ஓர் ஆடவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த முதியவரை சரமாரியாக தாக்கும் காணொளி, இன்று காலையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதை தொடர்ந்து அந்த முதியோர் இல்லத்திற்கு விரைந்த போலீசார் அவ்விருவரையும் கைது செய்துள்ளதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் அஜிசுல் முகமது கைரி தெரிவித்தார்.
அந்த முதியோர் இல்லத்தை வழிநடத்தி வரும் 44 வயது ஓர் இந்திய நபரும், பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் 36 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக முகமட் அஜிசுல் குறிப்பிட்டார்.
ஞாபக மறதியினால் அவதியுற்று வந்ததாக நம்பப்படும் 70 வயதுடையம் அந்த முதியவர் நடந்து கொண்ட முறையினால் அதிருப்தி கொண்ட அந்த இந்திய பெண்மணி அவரை பிரம்பினால் கண்மூடித்தனமாக தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த முதியவரை தாக்கியதை போல அந்த இல்லத்தில் தங்கியிருப்பவர்களும் தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக முகமட் அஜிசுல் குறிபிட்டார்.
தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் அந்த பெண்ணும் ஆடவரும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.