கோலாலம்பூர், மார்ச் 9 –
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை தேசிய மோசடி புகார் மையம், ஸ்கேம் மோசடிகள் தொடர்பாக 71 ஆயிரத்து 631 புகார்களை பெற்றுள்ளன. இதன் வழி மொத்தம் 24 கோடியே 50 லட்சம் வெள்ளி மதிப்பில் ஸ்கேம் மோசடியில் பணம் களவாடப்பட்டுள்ளதாக புகார் கிடைக்கப்பெற்றுள்ளன என்று நிதித்துறை துணை அமைச்சர் லீ ஹூய் யிங் தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்கேம் மோசடிகள் தொடர்பாக போலீஸ் துறை, 8 ஆயிரத்து 754 விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளது. இதில் 64 விசாரணை அறிக்கைகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சம்பந்தப்பட்டவையாகும் என்று லீ ஹூய் யிங் சுட்டிக்காட்டினார்.
போலீசாரின் புலன் விசாரணைக்கு ஏதுவாக 6 கோடியே 90 லட்சம் வெள்ளி ரொக்கத் தொகை, விசாரணைக்காக வங்கி கணக்குளில் முடக்கப்பட்டுள்ளன.
முதலீடு என்று கூறி, மோசடி செய்வது கவர்ச்சிகரமான திட்டங்கள் என்ற போர்வையில் செய்யப்பட்ட மோசடி சம்பவங்களாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் லீ ஹூய் யிங் குறிப்பிட்டார்.