கோலாலம்பூர், பிப்ரவரி 29 –
இஸ்லாத்தின் மாண்பு எனும் தலைப்பில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், உலாமாக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும், மக்களவை உறுப்பினர்களுக்கும், மலாய் ஆட்சியாளர்களுக்கும் வழங்கியுள்ள நினைவுறுத்தல் தொடர்பில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்,சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
ஹாடி அவாங்கின் இந்த நினைவுறுத்தல், மலாய் ஆட்சியாளர்களை அவமதிக்கும் செயலாகும் என்று சிலாங்கூர் சுல்தான் வர்ணித்துள்ளார். இதன் தொடர்பில் சிலாங்கூர் மாநில பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹலிம் தாமுரி மூலமாக ஹாடி அவாங்கிற்கு ஒரு கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் சுல்தான், தமது அரச அலுவலக முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி மலேசிய இஸ்லாமிய சமய விகாரங்களுக்கான மன்றத்தின் தேசியக்கூட்டத்தில் தாம் நிகழ்த்திய உரையை பாஸ் கட்சித் தலைவர் முழுமையாக படிக்கவில்லை என்று சுல்தான் வர்ணித்துள்ளார்.