டோக்கியோ, மே 23-
அண்மையில் கத்தாருக்கு மேற்கொண்டிருந்த அதிகாரத்துவ பயணத்தில், ஹாமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே-வை தாம் சந்தித்து பேசியிருந்ததை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்து பேசியுள்ளார்.
தாமும் இஸ்மாயில் ஹனியே-வும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்துவரும் சூழலில், அவரை சந்திக்கக்கூடாது என்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை என NIKKEI அனைத்துலக மாநாட்டில் நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தில் கலந்துக்கொண்டு பேசிய போது பிரதமர் கூறினார்.
இஸ்மாயில் ஹனியே உடனான சந்திப்பில், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதியும் தீர்வும் ஏற்பட, அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படும்படி தாம் கேட்டுக்கொண்டதாக கூறிய பிரதமர், தாம் வன்முறையை ஆதரிக்கவில்லை என்றார்.
இதற்குமுன்பு, ஹாமாஸ் -சுக்கு மலேசியா வழியாக நிதி அனுப்பப்படுவதாக கூறப்பட்ட சூழலில், ஹாமாஸ் -சின் அரசியல் பிரிவு தலைவரான அவரை் தாம் சந்தித்தது பல்வேறு ஆருடங்களுக்கு வித்திட்டிருந்ததை, பிரதமர் ஒப்புக்கொண்டிருந்தார்.
இருப்பினும், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனையில் அமைதி கிடைக்க வேண்டும் என்பதே தமது எண்ணம் எனவும் அவர் கூறியிருந்தார்.