கோலாலம்பூர், மே 15-
120 கோடி வெள்ளி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டத்திற்காக நிதி அமைச்சிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒதுக்கீட்டு நிதியில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடு நிகழ்ந்து இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அரசாங்க ஏஜென்சியின் இரண்டு உயர் அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
நிதி அமைச்சின் பணத்தை சம்பந்தப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்திற்கு தொடர்பு இல்லாத குத்தகையாளர் மற்றும் ஆலோசனை நிறுவனத்திற்கு மடைமாற்றம் செய்ததன் பேரில் 50 வயது மதிக்கத்தக்க அந்த இரு உயர் அதிகாரிகளும் பிடிபட்டனர்.
அவ்விருவரையும் இன்று மே 15 ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதிப் பெறப்பட்டுள்ளதாக SPRM வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த இரு நபர்களும் 2009 ஆம் ஆண்டு SPRM சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருவதாக அதன் விசாரணைப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ ஹிஷாமுதீன் ஹாஷிம் குறிப்பிட்டுள்ளார்.