கோலாலம்பூர், மார்ச் 26.
சந்தையில் 140 ஆயிரம் மெட்ரிக் தான் உள்நாட்டு அரிசி கையிருப்பு உள்ளதாக கூறியதற்கான ஆதாரங்களை வழங்கும்படி, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 20ஆம் தேதி நடைபெற்ற வாழ்க்கை செலவின நடவடிக்கை மன்றம் – நக்கோல்-லின் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்த அந்த தகவலை சுட்டிக்காட்டி, நக்கோல்-லின் உணவு பிரிவுக்கான நடவடிக்கைக் குழு தலைவரும் புக்கிட் கன்தாங் நாடாளுமன்ற உறுப்பினருமான சியேட் அபு ஹுசின் ஹபிஸ் சியேட் அப்துல் பசல் கேள்வியெழுப்பினார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், உள்நாட்டு அரிசியின் கையிருப்பில் இன்னமும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில்அந்த அரிசியின் கையிருப்பும் போதுமானதாக உள்ளதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் அமலாக்க தரப்பு கூறியுள்ளதைக் கேட்டு தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறினார்.
கடந்த 7 மாதங்களாக நாட்டில் உள்நாட்டு அரிசி பற்றாக்குறை நிலவுகின்றது. பிரதமர் அது தொடர்பில் கோபமடைந்த அடுத்த கணமே, 140 ஆயிரம் மெட்ரிக் தான் அரிசி இருப்பதாக தெரிவிக்கப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.
சந்தையில் அந்த அரிசி உள்ளதைக் கண்டறிய, அதனை விநியோகிக்கும் தொழிற்சாலைகளின் விபரங்களை அமைச்சு வெளியிட வேண்டுமென சியேட் அபு ஹுசின் ஹபிஸ் சியேட் அப்துல் பசல் வலியுறுத்தினார்.