கோலாலம்பூர், மார்ச் 5 –
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கெடா, வட மலேசிய பல்கலைக்கழகமான யூனிவெர்சித்தி உத்தாரா மலேசியா வில் மாணவர் தங்கும் விடுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கிள்ளானைச் சேர்ந்த 20 வயது மாணவி ஸ்.வினோசினி மரணம் தொடர்பில் அந்த அரசாங்க பல்கலைக்கழகத்திடமிருந்து 30 லட்சம் வெள்ளி இழப்பீடு கோரி, மாணவியின் தந்தை ர்.ரவிகுமார் சிவில் வழக்கை தொடுத்துள்ளார்.
தமது மகள் வினோசினியின் மரணத்திற்கு ஒரு பொது உயர் கல்விக்கூடமான யூனிவெர்சித்தி உத்தாரா மலேசியா தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று கோரி தமது வழக்கறிஞர் நிறுவனமான ம். மனோகரன் அண்ட் கோ மூலமாக 55 வயதுடைய சிவகுமார் இவ்வழக்கு மனுவை கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி அந்தப் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதி அறையில் தமது மகள் மூச்சுப்பேச்சற்ற நிலையில் இறந்து கிடந்ததாகவும், போலீசாரும், மருத்துவ அதிகாரிகளும் மேற்கொண்ட புலன் விசாரணை மற்றும் சவப்பிரசோதனையில் தமது மகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாகவும், அதனை அலோர்ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதாகவும் சிவகுமார் தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட விடுமுறைக்கு பின்னர் மாணவர்கள் பல்கலைக்கழக தங்கும் விடுதிக்கு திரும்புவதற்கு முன்னதாக அந்த தங்கும் விடுதியின் மின்சார பாதுகாப்பு அம்சங்கள் முறையாக உள்ளனவா? என்பதை உறுதி செய்ய அந்த பல்லைக்கழக நிர்வாகம் தவறிவிட்டதாக மாணவி வினோசினியின் தந்தை தமது வழக்கு மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.