கோலாலம்பூர், மார்ச் 3 –
மோசடிக் கும்பல்களின் நடவடிக்கையின் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரையில் சந்தேகத்திற்கு இடமாக 380 கோடி வெள்ளி பணம், நாட்டை விட்டு 43 நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச மலேசிய போலீஸ் படை தெரிவித்துள்ளது.
இந்தப் பணவர்த்தனை ஒவ்வொன்றும் சந்தேகத்திற்கு இடமானதாகும். இந்த மோசடி வேலைகளில் மலேசியாவில் பதிவுப் பெற்ற 15 நிறுவனங்கள் தங்கள் வங்கி கணக்கை தந்து, இந்த முதலீட்டு மோசடி நடவடிக்கைகளுக்கு துணையாக இருந்துள்ளன. இது குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்துக் ஶ்ரீ ரம்லி மொகமட் யூசுப் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் முதலீட்டு மோசடிகளில் ஏமாற்றிய கும்பல்கள்தான், இந்த பெரும் தொகையை நாட்டிலிருந்து 43 நாடுகளுக்கு வெளியேற்றி, பணபரிமாற்றத்தை செய்துள்ளன என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரம்லி மொகமட் யூசுப் குறிப்பிட்டுள்ளார்.