கோலாலம்பூர், ஜன – 4,
தொழில் முனைவர்களுக்கும், மைக்ரோ குறு தொழில்துறையினருக்கும் கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டிலும் 5 கோடி வெள்ளி கடன் வசதியை பேங்க் ராக்யாட் வங்கி ஏற்படுத்தியுள்ளதாக தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
மைக்ரோ கடன் திட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சலுகையானது,
PMKS எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினக்கு பேங்க் ராக்யாட்தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆதரவாகும் என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
பேங்க் ராக்யாட்டின் இந்த மைக்ரோ கடன் வசதியானது, மடானி பொருளாதார முன் முயற்சியின் மூலம் நாட்டின் பொருளாதார உருமாற்றத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை அனைத்துலக மயமாக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளது என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
இன்று வியாழக்கிழமை கோலாலம்பூரில் உள்ள பேங்க் ராக்யாட் தலைமையகத்திற்கு வருகை புரிந்த டத்தோ ரமணன், அந்த முன்னணி வங்கியின் தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் தலைவர் ஆகியோருடன் நடத்திய சிறப்பு சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மைக்ரோ தொழில்துறையை சார்ந்த 1,856 பேருக்கு 5 கோடி வெள்ளிக்கும் அதிகமான தொகையை பேங்க் ராக்யாட் கடனாக வழங்கியுள்ளது. இதில் பூமிபுத்ரா தொழில்முனைவர்களுக்கு 4 கோடியே 35 வெள்ளியும், சீனர்களுக்கு 54 லட்சம் வெள்ளியும், இந்தியர்களுக்கு 10 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளியையும் பேங்க் ராக்யாட் ஒதுக்கியதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.