மலாக்கா, மே 21-
மலாக்கா, அலோர் காஜா-வில், லோட்டரி-யில் சுமார் 500 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை, தாம் வென்றுள்ளதாக ஏமாற்றுப்பேர்வழிகள் கூறியதை நம்பிய 58 வயது இல்லத்தரசி ஒருவர், 20 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய தனது தங்க ஆபரணங்களை அவர்களிடம் பறிகொடுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மஸ்ஜித் தானா-விலுள்ள பேரங்காடிக்கு தினசரி பொருள்களை வாங்க அவர் சென்றிருந்த போது, இந்தோனேசிய பெண் உள்பட 40 முதல் 50 வயதுக்கு உட்பட நால்வர் அவரிடம், அந்த கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
தொடக்கத்தில், அம்மாதுவை லோட்டரி கடைக்கு காரில் அழைத்து சென்ற அந்த ஏமாற்றுப்பேர்வழிகள், பரிசுதொகையை பெற்றவுடன், தங்களை அவர் ஏமாற்றிவிடக்கூடாது என்றும், அதற்காக அவர் அணிந்துள்ள நகைகளை கழற்றிக்கொடுக்கும்படியும் கூறியுள்ளனர்.
பரிசுதொகை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் அம்மாது, தனது தங்கச் சங்கிலி, தங்கக் காப்பு முதலானவற்றைக் கழற்றி கொடுத்துள்ளார்.
பின்னர், லோட்டரி கடை வந்ததும், அந்நால்வரும் அவரை, உள்ளே சென்று பரிசுதொகைப் பெற்றுவரும் படியும், தாங்கள் காரில் காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அவரும் அதை உண்மையென நம்பி, காரிலிருந்து இறங்கிய போது, அந்த ஏமாற்றுபேர்வழிகள் அவ்விடத்தை விட்டு நகர்ந்துள்ளனர்.
பின்னர், தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த அம்மாது, அதே நாளில் கோலா சுங்காய் பாரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.