பேராக், மே 21-
ஈராண்டுகளுக்கு முன்பு, 6 வயது நிரம்பிய சிறுமியின் தொடைப் பகுதியை தொட்டு இழிச்செயலில் ஈடுபட்ட முகமது அலி ஹாசன் எனும் 59 வயது முதியவருக்கு, தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.
அந்நபர் குற்றம் புரிந்துள்ளதை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்ததை அடுத்து, நீதிபதி இந்தான் நூருல் ஃபரீனா ஜைனல் அபிடின் அத்தீர்ப்பை வழங்கினார்.
மேலும், 3 ஆண்டுகால சிறை தண்டனையில், அம்முதியவருக்கு புனர்வாழ்வு ஆலோசனை வழங்கவும் தண்டனைக் காலம் முடிந்த பிறகு, ஓராண்டுகள் அவர் போலீஸின் கண்காணிப்பில் இருக்கவும் நீதிபதி இந்தான் நூருல் ஃபரீனா ஜைனல் அபிடின் உத்தரவிட்டார்.
இம்மாதம் 17ஆம் தேதி வழங்கப்பட்ட அத்தீர்ப்பு குறித்து நீதித்துறையின் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விளக்கத்தில் நீதிபதி அதனை தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆடவர், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி, பேராக், லங்காப், சுங்காய் மாணிக்-க்கில் அக்குற்றத்தை புரிந்திருந்த நிலையில், 2017ஆம் ஆண்டு சிறார் மீதான பாலியல் குற்றச்சட்டத்தின் கீழ், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.