பொந்தியான், மார்ச் 3 –
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு தங்களின் ஆதரவை நல்கியுள்ள டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளை காலி செய்து ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அடுத்து நடைபெறக்கூடிய இடைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தனது தேர்தல் நடவடிக்கை அறையை திறப்பதற்கு அம்னோ தயாராக இருக்க வேண்டும் அதன் உச்சமன்ற உறுப்பினர் டத்துக் ஶ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து கட்சியில் இருந்து கொண்டு, தங்கள் ஆதரவை வெளியாட்களுக்கு வழங்கும் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்கவும் ,அவர்கள் வகித்து வந்த நாடாளுமன்றத் தொகுதிகள் காலியாகி விட்டன என்று அறிவிக்கவும் கட்சியின் தலைமைத்துவம் முழு அதிகாரம் கொண்டிருப்பதற்கு கட்சியின் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நேற்று நடைபெற்ற பெர்சத்து கட்சியின் சிறப்புக்கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஜெலி,குவா மூசாங், குவாலா கங்சார், லாபுவான், புக்கிட் கந்தாங், தன்ஜோங் காராங் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பிரதமர் அன்வாருக்கு தங்கள் ஆதரவை புலப்படுத்தி வருவதால் அந்த அறுவரை கட்சியை விட்டு நீக்குவதற்கு நடப்பு சட்டத்திருத்தம் வகை செய்கிறது.
எனினும் அந்த ஆறு தொகுதிகள் விவகாரத்தில் எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்வதற்கு அம்னோ தயாராக இருக்க வேண்டும் என்று பரிந்துரை முன்வைக்கப்படும் என்று மஸ்லான் குறிப்பிட்டார்.