நாட்டில் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த மருத்துவர்கள் விவகாரத்தைக் கையாளுவதற்கு உயர் நிலையிலான குழு ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்த போதிலும், நாளை திங்கட்கிழமை நாடு தழுவிய நிலையில் ஒப்பந்த மருத்துவர்கள் மறியல் நடவடிக்கையில் குதிப்பது உறுதியாகியுள்ளது.
நாளை ஏப்ரல் 3 தொடங்கி 5 ஆம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு நீடிக்கும் இந்த மறியல் நடவடிக்கையில் சுமார் 10,000 முதல் 13,000 வரையிலான ஒப்பந்த மருத்துவர்கள் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னையை தீர்ப்பதாக கூறி பல குழுக்கள் அமைக்கப்பட்டன. கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால், அவை நடப்பு பிரச்னையின் தீர்வுக்கு உதவவில்லை. இது சுகாதார அமைச்சின் இயலாமையைக் காட்டுகிறது என்று மறியல் நடவடிக்கைக்கு தலைமையேற்றுள்ளவர்களில் ஒருவரான மரத்துவர் டாக்டர் ஜமால் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.