இந்தியர்களின் சமூகவில், பொருளாதார உருமாற்றும் பிரிவான மித்ராவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 கோடி வெள்ளி தொடர்பான விளக்கமளிப்பு கூட்டம், நாளை திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தில் இந்திய எம்.பி.க்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் அந்த கூட்டம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது குறித்து ஈப்போ பாராட் எம்.பி. எம். குலசேகரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 10 கோடி வெள்ளியைப் பிரதமர் துறையின் கீழ் உள்ள மித்ரா நிர்வாகம், உதவித் தேவைப்படக்கூடிய இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு செலவிடப்போகிறது, அதற்கான பரிந்துரைகள் யாவை, அந்த நிதியை வழங்குவதில் எத்தகைய திட்டங்களை மித்ரா கொண்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தார்.
இந்தக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்திய சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களும் கலந்து கொள்வதாக இருந்தது.
இதற்கான கடிதத்தை மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயருக்கு எம். குலசேகரன் அனுப்பியிருந்தார். தவிர இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கான ஒப்புதலையும் அரசாங்க தலைமை செயலாளர் டான்ஸ்ரீ சுகி அலியிடம் பெற்று விட்டதாக குலசேகரன் தெரிவித்து இருந்தார்.
எனினும் அரசாங்க தலைமைச் செயலாளர் சுகி அலியிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதுமானது அல்ல. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அனுமதியையும் பெற வேண்டும் என்று கடைசி நேரத்தில் தமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக குலசேகரன் குறிப்பிட்டார்.
இதனை மித்ரா நிர்வாகம் முதலிலேயே தெரிவித்து இருந்து இருக்குமானால் தாம் பிரதமரின் அனுமதியைப் பெற்று இருக்க முடியும் என்று குலசேகரன் குறிப்பிட்டு இருந்தார். தற்போது பிரதமர் வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால், இதற்கான அனுமதியைப் பெறும் வகையில் நாளை நடைபெறவிருந்த மித்ரா விளக்கம் அளிப்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக குலசேகரன் தெரிவித்துள்ளார்.