நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் சுமார் பத்தாயிரம் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக தலையிட வேண்டும் என்று பாசீர் குடாங் எம்.பி. ஹசான் கரிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
“கறுப்பு தினம் ” என்ற பெயரில் இன்று திங்கட்கிழமை தொடங்கி, வரும் புதன்கிழமை வரையில் 3 தினங்களுக்கு மறியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உறுதி பூண்டுள்ள அரசு மருத்துவமனைகளில் குத்தகை அடிப்பைடயில் பணியாற்றி வரும் ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பிரதமர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அந்த பி.கெ.ஆர் எம்.பி. கேட்டுக்கொண்டார்.
அரசு சேவையில் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக அமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முதல் நிலைப்பணியாளர்களான ஒப்பந்த மருத்தவர்கள், மறியல் நடவடிக்கையில் குதித்து இருப்பது, அவர்களின் வாழ்வாதரப்பிரச்னையாகும். தொழிலாளர்கள் என்ற முறையில் அவர்கள் அவ்வாறு செய்வதற்கு உரிமை இருக்கிறது என்று ஒரு சட்ட வல்லுநரான ஹசான் கரிம் குறிப்பிட்டார்.
ஒப்பந்த மருத்துவர்களின் இந்த தொழிலியல் போராட்டம், அரசு மருத்துவமனைகளில் செயலாக்கத்தை நிலைக்குத்தச் செய்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே , பல ஆண்டு காலமாக நீடித்து வரும் அவர்களின் அடிப்படை உரிமைப் போராட்டம் மீதான விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தீர்த்து வைப்பதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என்று ஹசான் கரிம் குறிப்பிட்டார்.