2023 ஆம் ஆண்டுக்கான நிதி சட்டத்திருத்த மசோதா மற்றும் கட்டாய மரணத் தண்டனையை ரத்து செய்யும் சட்டத்திருத்த மசோதா ஆகியவை இன்று மக்களைவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படவிருக்கின்றன.
தற்போது கட்டாய மரணத் தண்டனை நிறைவேற்றத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் காத்திருக்கும் வேளையில் அவர்களுக்கான அந்த கடும் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வகை செய்யும் வகையில் இந்த கட்டாய மரணத் தண்டனை மீதான உத்தேச சட்டத்திருத்த மசோதா முதல் முறையாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.
கட்டாய மரணத் தண்டனையை ரத்து செய்யும் சட்டத்திருத்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான் தாக்கல் செய்யவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அச்சட்டத்திருத்த மசோதான மீதான சாதக பாதக விளைவுகள் குறித்து எம்.பி.க்கள் விவாதிக்கவிருக்கின்றனர்.
1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் B பிரிவு, கொலை குற்றத்திற்கான குற்றவியல் சட்டம் 302 மற்றும் மற்றும் ஆள் கடத்தல் தடுப்புச் சட்டம் ஆகியவை கட்டாய மரணத் தண்டனையை விதிப்பதற்கு தற்போது வகை செய்கின்ற கடும் சட்டங்களாகும்.