நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ஒரு தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங்கின் முன்னாள் கணவர் முகமட் நாகேஸ்வரன் முனியாண்டிக்குக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 20,000 வெள்ளி அபராதம் விதித்தது.
நீதிமன்ற நிர்வாக நடைமுறைகளில் நாகேஸ்வரன் தலையிட்ட குற்றத்திற்காக நீதிமன்ற அவமதிப்பு அடிப்படையில் அவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எவ்ரோல் மரியட் பீட்டர்ஸ் அபராதத்தை விதித்தார்.
மதம் மாறியவரான நாகேஸ்வரன் முனியாண்டி, தீர்ப்பு அளிக்கப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் அபராதத் தொகைக்ச் செலுத்த வேண்டும். இல்லையேல் 14 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி எவ்ரோல் மரியட் பீட்டர்ஸ் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
தமது மூன்று பிள்ளைகளைக் கடத்திச் சென்றதுடன், தம்முடைய அனுமதியின்றி ஒரு தலைபட்சமாக மதம் மாற்றம் செய்ததாக குற்றச்சாட்டுப்பட்டுள்ள நாகேஸ்வரன் முனியாண்டிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மீதான பூர்வாங்க வழக்கு தொடங்கப்பட வேண்டும் என்று லோ சியூ ஹோங் தொடுத்திருந்த வழக்கு மனுவிற்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது.
நீதிமன்றத்திற்குத் தேவைப்படக்கூடிய ஆவணங்களின் நகலை ஒப்படைப்பதிலிருந்து தவிர்க்கப்பார்க்கும் நாகேஸ்வரன் முனியாண்டியின் செயல், நீதிமன்ற அவமதிப்புக்குரியதாகும் என்று நீதிபதி எவ்ரோல் மரியட் பீட்டர்ஸ் தமது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார்.