5 லட்சம் வெள்ளியை இழந்த முன்னாள் ஆசிரியை

காப்புறுதி நிறுவனம் என்று அடையாளம் கூறிக்கொண்டு, கிடைக்கப்பெற்ற​ கைப்பேசி அழைப்பை நம்பி, முன்னாள் ஆசிரியை ஒருவர் தனது சேமிப்புப்பணமான 5 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.

தனியார் மருத்துவமனையிலிருந்து காப்புறுதிப் பணத்தைக் கோருவது தொடர்பில் ஈப்போவைச் சேர்ந்த 59 வயதுடைய அந்த மாதுவின் வங்கி கணக்கில் உள்ள ​​பணம் குறித்து புலன் விசாரணைக்குப் போ​லீஸ் அதிகாரி ஒருவர் விளக்கம் கோருவார் என்று அந்த அழைப்பில் கூறப்பட்டுள்ளதாக பேரா மாநில போ​லீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் தெரிவித்தார்.

மேலும் புலன் விசாரணைக்கு ஏதுவாக நடப்பு வங்கி கணக்கில் உள்ள பணத்தை அந்த மாதுவிற்குச் சொந்தமான மற்றொரு வங்கி கணக்கில் மாற்றும்படி அந்த அழைப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமது பணம் பறிபோய்விடும் என்ற அச்சத்தில், தன்னை அதிகாரி என்று கூறிக்கொண்ட நபரிடம் வங்கியின் ஏ.டி.எம் கார்டு விவரங்களை அந்த மாது தம்மை அறியாமலேயே தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மின்னல் வேகத்தில் வங்கிப் பணம் மூன்றாவது கணக்கிற்கு மாற்றப்பட்டதில் அந்த முன்னாள் ஆசிரியை தமது சேமிப்புப்பணமான 5 லட்சத்து 85 ஆயிரத்து 904 வெள்ளியை இழந்துள்ளதாக போ​லீஸ் புகார் செய்துள்ளார் என்று முகமட் யூஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS