சிறையில் உள்ள 70,000 க்கும் மேற்பட்ட கைதிகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் அதேவேளையில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அளவிற்கு உழைக்கக்கூடிய நிலையில் உள்ளனர் என்று மனித வள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை இலாகாவின் வியூக ஒத்துழைப்புடன் பெர்கெசோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் வாயிலாக கைதிகளுக்கான வேலை வாய்ப்புத்திட்டத்தை மனிவள அமைச்சு அமல்படுத்த இயலும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
துரதிர்ஷ்டவசமாக சிறை வாழ்வில் தங்கள் வாழ்க்கையைப் பாழ்படுத்திக்கொண்டுள்ள கைதிகள் குறிப்பாக இளையோர்கள் இத்தகைய வேலை வாய்ப்புத் திட்டத்தின் வாயிலாக திருந்திய மனிதர்களாக பலன் பெறும் அதேவேளையில், தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள தொழில்துறைகளும் ஆள்பலத்தைச் சரிசெய்து கொள்ள இயலும் என்று சிவகுமார் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் விஸ்மா பெர்கெசோ தலைமையகத்தில் சிறைச்சாலை இலாகாவுடன் கூட்டு ஒத்துழைப்பு கொள்வது தொடர்பில் பெர்கெசோ செய்து கொண்ட ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்விற்குத் தலைமையேற்றப் பின்னர் மனித வள அமைச்சர் இதனை அறிவித்தார்.
சிறைச்சாலை இலாகா இவ்வாண்டில் 15 ஆயிரம் கைதிகளை வேலைக்கு அமர்த்துவது தொடர்பில் இலக்கு கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.