SRC International வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதத்தையும் விதித்த நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலிக்கு எதிராக கூறப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முடிவை கடித வாயிலாக , நஜீப் வழக்கறிஞர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கும் சட்டத்துறை அமைச்சர் அஸாலினா ஓத்மான் சாயிட், அது குறித்து அமைச்சரவையில் கலந்து ஆலோசிக்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விவகாரத்தை அமைச்சர் அஸாலினா ஓத்மான், இந்த வாரம் அமைச்சரவைக் கூட்டதில் கொண்டு வருவாரா? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
நீதிபதி முகமட் நஸ்லான், நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளார் என்று ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கிய அறிக்கையின் முடிவை, ரகசியம் காக்கப்படாமல், நஜீப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவிற்குக் கடித வாயிலாக தெரியப்படுத்தியிருப்பது குறித்து அமைச்சர் அஸாலினா பலத்த கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார்.
இந்நிலையில் நஜீப்பின் வழக்கறிஞருக்கு இந்த விவகாரத்தைத் தெரியப்படுத்துவதற்கு முன்னதாக இது குறித்து அமைச்சரவையில் அஸாலினா விவாதித்துள்ளாரா? என்ற கேள்விக்கு அந்தோணி லோக் மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.