முதலீட்டுத்திட்டத்தில் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய லாபத் தொகையை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் டத்தோ அந்தஸ்தை கொண்ட இந்திய ஒருவரின் ஆசைவார்த்தைகளை நம்பி லட்சக்கணக்கான வெள்ளியை முதலீடு செய்ததாக கூறப்படும் 10 இந்தியர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர் செந்தூல் போலீஸ் நிலையத்தில் அந்த பத்து பேரும் புகார் செய்துள்ளனர். மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் தலைமையில் ஒன்றுகூடிய அந்த பத்து பேர், முருகன் என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட டத்தோ அந்தஸ்தை கொண்ட பிரமுகர் மற்றும் அவரின் பணியாளர்கள் சிலருக்கு எதிராக இப்போலீஸ் புகாரை செய்துள்ளனர்.
இந்த முதலீட்டுத் திட்டத்தில் சபா, பினாங்கு உட்பட நாடு தழுவிய நிலையில் 30 முதல் 40 பேர் முதலீடு செய்து இருப்பதாக கூறப்பட்ட போதிலும் பத்து பேர் மட்டுமே துணிந்து போலீஸ் புகார் செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் பல லட்சம் வெள்ளியை பறிகொடுத்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட டத்தோவிற்கு எதிராக போலீஸ் புகார் செய்தால் முதலீடு செய்தப் பணம் கிடைக்காமல் போய் விடும் என்று இன்னும் சிலர் பயப்படுகின்றனர் என்று இந்த திட்டத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை முதலீடு செய்ததாக கூறும் சோழன் சிதம்பரம் குறிப்பிடுகிறார்.
இந்த முதலீட்டுத் திட்டத்தில் ஒவ்வொருவரும் சராசரி ஒரு லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி முதல் 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வெள்ளி வரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் புகார் செய்த பத்து பேர் மொத்தம் 26 லட்சம் வெள்ளி பணத்தை இழந்துள்ளதாக கூறுகின்றனர்.
முதலீட்டுப் பணத்தை சம்பந்தப்பட்ட டத்தோவின் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் உட்பட சிலர் களவாடிவிட்டதாக காரணம் கூறப்பட்ட போதிலும் தங்களை இத்திட்டத்தில் முதலீடு செய்ய காரணமாக இருந்த டத்தோ அந்தஸ்தை கொண்ட நபரே இதற்கு தார்மீக பொறுப்பேற்று, பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று அந்த பத்து பேரும் கோரிக்கை விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டினேஷ் முத்தாள் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டுள்ளவர்கள் உண்மையிலேயே ஏமாற்றப்பட்டதாக கண்டறியப்படுமானால் இது குறித்து அரச மலேசிய போலீஸ் படை விரிவான விசாரணையை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் பணம் திரும்ப கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று இவ்விவகாரத்தை முன்னெடுத்துள்ள மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.