வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 285.5 ஆவது கிலோமீட்டரில் வடக்கை நோக்கி, நீலாய் அருகில் சுற்றுலா பேருந்தும், / காரும் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பேருந்து ஓட்டுநரும், முன் இருக்கையில் அமர்ந்திருந்த இந்தோனேசியப் பயணி ஒருவரும் மாண்டனர். சொற்ப காயங்களுக்கு ஆளானதாக கூறப்படும் 22 பயணிகளின் நிலை உடனடியாக தெரியவில்லை.
சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த
லா ஹோலிடே என்ற அந்த சுற்றுலா பேருந்து, எதிரே சென்று கொண்டிருந்த ப்ரோத்தோன் வீரா காரில் மோதி, சாலைத் தடுப்பை உரசிச் சென்று விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது. பேருந்தின் முன்புறம் சின்னாபின்னமான நிலையில் ஓட்டுநரும், பயணியும் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பியதாக நீலாய், தீயணைப்பு, மீட்புப்படையின் செயலாக்க அதிகாரி ஷாஹ்ருடின் மொஹமாட் டின் தெரிவித்தார்.