முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஜானா விபாவா தொடர்பிலான 23 கோடியே 25 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட 4 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர், இன்று விடுதலை செய்யப்பட்ட போதிலும் சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பில் அவருக்கு எதிராக மேலும் 3 குற்றச்சாட்டுகள் இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சட்டத்துறை அலுவலகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு சட்டவிரோத பணம் மாற்றம், பயங்கரவாத நிதி அளிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வாயிலாக பணம் ஈட்டுதல் தடுப்பு சட்டத்தின் கீழ் முகைதீன் இன்னமும் 3 குற்றவியல் தன்மையிலான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருப்பதாக சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ இட்ரஸ் ஹருன் தெரிவித்துள்ளார்.
முகைதீனுக்கு எதிராக இந்த 3 குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு, அடுத்த மாதம் 13 ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பதையும் இட்ரஸ் ஹருன் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கும், இடைப்பட்ட காலகட்டத்தில் புகாரி இக்குய்டி எஸ். டி . என் . பி.ஹ். டி, நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 95 லட்சம் வெள்ளியை சட்டவிரோதமாக பெற்று, தமது தலைமையிலான பெர்சத்து கட்சியின் சி.ஐ.எம்.பி வங்கி கணக்கில் வரவு வைத்துக்கொண்டதாக முகைதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும் என்று இட்ரஸ் ஹருன் விளக்கம் அளித்துள்ளார்.