சிலாங்கூரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாரிசான் நேஷனல் முதல் முறையாக மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெறுகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டுடன் சிலாங்கூர் மாநிலத்தில் பாரிசான் நேஷனல் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட நிலையில், நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் பாரிசான் நேஷனல் இணைந்ததைத் தொடர்ந்து மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் 12 இடங்களில் அம்னோ போட்டியிட்டது. எனினும் அதனால் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மொத்தம் 56 தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் 32 இடங்களை வென்றது.
வெறும் இரண்டு இடங்களில் வென்ற அம்னோவிற்கு மாநில ஆட்சிக்குழுவில் இடம் அளிக்கப்படுவது மூலம் தன்னுடன் இணைந்திருந்த அம்னோவிற்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி உண்மையான ஒற்றுமை அரசாங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதே தவிர வாய்ப்பேச்சு அல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.