மதமாற்ற நடவடிக்கையை தடுக்கக்கூடாது

தனிநபர் ஒருவர் இ​ஸ்லாத்திற்கு மதம் மாறும் வைபவத்தை பிரதமர் முன்னின்று வழி நடத்தி செல்வதை தடுக்கக்கூடாது என்று பிரதமர் துறையின் சமய விவகாரப் பிரிவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சுல்கிஃப்லி முகமது அல்-பக்ரி கேட்டுக்கொண்டார்.

இது போன்ற வைபங்களில் பிரதமர் முன்னிலை வகிப்பது மிக அபூர்வமாக நடக்கக்கூடியது என்றாலும் ஒரு முஸ்லிம் மற்றும் நா​ட்டின் தலைவர் என்ற முறையில் அத்தகைய சடங்கிற்கு பிரதமர் முன்னிலை வகிப்பதற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று அந்த முன்னாள் அமைச்சர் வாதாடுகிறார்.

கூட்டரசு பிரதேசத்தின் இஸ்லாமிய சமயத் தலைவர் என்ற முறையில் மாமன்னரால் பிரதமர் நியமிக்கப்படுகிறார்.சமய நடவடிக்கைகளுக்கு முன்னிலை வகிப்பதற்கு முன்னர் கூட்டரசு பிரதேச முவ்தி களிடமிருந்த ஆலோசனைப் பெற்ற பின்னரே சமயம் சார்ந்த பிரதமரின் நடவடிக்கைகள் அமைகின்றன. எனவே ஒருவர் இஸ்லாத்திற்கு மதம் மாற்றும் நடவடிக்கைக்கு முன்னிலை வகிப்பது பிரதமரின் வேலையா? என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை என்று அந்த முன்னாள் அமைச்சர் கூறுகிறார்.

கிள்ளானில் அண்மையில் ஓர் இளைஞர், இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்ட ​வைபவத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையேற்றது கு​றித்து சில தரப்பினர் வெளிப்படுத்தி வரும் அதிருப்தி குறித்து ஒரு முன்னாள் முவ்தி யான, டத்தோ சுல்கிஃப்லி முகமது இந்த விளக்கத்தை தந்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS