பூலாய், சிம்பாங் ஜெராம் ஆகிய இடைத் தேர்தல்களில் மும்முனைப் போட்டி

ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத்தேர்தல்களில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இவ்விரண்டு தொகுதிகளிலும் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெறும் வேளையில் அதற்கான வேட்புமனுத்தாக்கல்கள் இன்று சனிக்கிழமை காலையில் நடைபெற்றன.
இரண்டு தொகுதிகளிலும் பக்காத்தான் ஹரப்பான், பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் சுயேட்சைகள் என மும்முனைப்போட்டி நிலவுகிறது என்று தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் அறிவித்துள்ளது.

ஜோகூர் பாருவில் டேவான் ஜுப்லி இந்தான் மண்டபத்தில் நடைபெற்ற வேட்பு மனுத்தாக்கலில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தத்தம் ஆதரவாளர்களுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் சார்பில் சுஹைசான் கையாட், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் சுல்கிஃப்லி ஜாபர் மற்றும் சுயேட்சை வேட்பாளராக சம்சுதீன் ஃபௌஸி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் சார்பில் நஸ்ரி அப்துல் ரஹ்மான் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் டாக்டர். மஸ்ரி யாஹ்யா மற்றும் சுயேட்சை வேட்பாளராக எஸ்.ஜெகனாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 23 ஆம் தேதி இவ்விரு தொகுதிகளிலும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் சலாஹுடின் அயோப் காலமானதைத் தொடர்ந்து இவ்விரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.

WATCH OUR LATEST NEWS