கடந்த வாரம் திங்கட்கிழமை, மஇகா புதிய கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் நடைபெற்ற பல மதங்கள் சார்ந்த பன்முக சமய சடங்கின் போது, முஸ்லிம் சமயப் போதகர் ஒருவரும் டோவா ஓதி, அந்த சடங்கில் கலந்து கொண்டது தொடர்பான விவகாரத்தில் குற்றத்தன்மை இல்லை என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
எனினும் இது முழுக்க முழுக்க சமயம் சார்ந்த விவகாரமாக இருப்பதால் இதனை விசாரணை செய்வதற்கு ஜாவி எனப்படும் கூட்டரசுப்பிரதேச இஸ்லாமிய சமய இலாகாவிடமே போலீசார் ஒப்படைப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ஷுஹைலி ஜைன் தெரிவித்துள்ளார்.
அந்த பன்முக சடங்கின் போது இந்து சமயத்தைச் சேர்ந்த சிவச்சாரியார்கள், வேத மந்திரங்களை ஓதி, யாகம் வளர்த்த நிகழ்வில் ஒரு முஸ்லிம் சமயப் போதகர் கலந்து கொண்டு, அவரும் அதில் டோவா ஓதி இருப்பது, முழுக்க முழுக்க ஜாவியின் விசாரணைக்கு உட்பட்ட விவகாரமாகும் என்று ஷுஹைலி ஜைன் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அந்த சமயப் போதகருக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்யப்பட்ட போதிலும், தங்களைப் பொறுத்தவரையில் அதில் குற்றத்தன்மை தொடர்பான அம்சங்கள் இருப்பதாக தெரியவில்லை. இதனை ஜாவிதான் விசாரணை செய்து முடிவு செய்ய வேண்டும் என்று ஷுஹைலி ஜைன் விளக்கினார்.