அரசியல்வாதியினால் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் பணிப்பெண் ஒருவர், அவரின் வீட்டிலிருந்து தப்பித்து, கோலாலம்பூரில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். இதனை கோலாலம்பூரில் உள்ள மலேசியாவிற்கான இந்தோனேசியத் தூதர் ஹெர்மொனொ உறுதிப்படுத்தினார்.
இந்தோனேசியா, மத்திய ஜாவாவைச் சேர்ந்த 57 வயதுடைய அந்தப் பணிப்பெண் மலேசியாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியின் வீட்டில் வேலை செய்து வந்ததாக தூதர் ஹெர்மொனொ குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த இந்தோனேசியப் பணிப்பெண் வேலை செய்து வந்த வீட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து அந்த மலேசிய அரசியல்வாதி அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து அந்த அரசியல்வாதி விவரிக்கையில் தமக்கு எதிராக அவதூறு விளைவிக்கும் நோக்கில் இத்தகைய பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பாக விரைவில் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.