தனது நண்பரை அடித்துக் கொன்றப் பின்னர் சடலத்தை லோரியில் ஏற்றிக்கொண்டு சென்றதாக நம்பப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை 1.41 மணியளவில் சிப்பாங், ஜாலான் உபிஎம் டத்தோ அபு பாகார் பகின்டாவில் வேகமாக சென்று கொண்டிருந்த லோரி ஒன்றை மடக்கிய ரோந்து கார் போலீசார், அந்த லோரியை சோதனையிட்ட போது, சுயநினைவு இழந்த நிலையில் ஆடவர் ஒருவர் கிடத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
போலீசார் உடன் செல்ல அந்த லோரி, செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்த ஆடவர் கீழே இறக்கப்பட்டு, மருத்துவமனை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் இறந்து விட்டது உறுதி செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோஃப் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அந்த லோரியை செலுத்திய 41 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மரணமுற்ற 43 வயது நபர், திடமான பொருள் ஒன்றினால் தலையிலேயே அடித்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ஏசிபி வான் கமாருல் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்ட லோரி ஓட்டுநரும், உயிரிழந்த நபரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது.