இரண்டு தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை, கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ குத்தகையாளர்கள் தாங்களே என்று கூறி கொண்டு , அப்பள்ளிகளின் மேலாண்மை வாரியமான எல்பிஎஸ் வாரியத்தை நம்பவைத்து மொத்தம் 12 லட்சம் வெள்ளியை அபகரித்து, மோசடி புரிந்ததாக இரண்டு நபர்கள் நேற்று ஷா ஆலம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநரான 40 வயது முஹமாட் ஷாஃபீ முஹமாட் மற்றும் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் நிர்வாகியான 48 வயது செஹ் செங் நாம் ஆகிய இருவரும் நீதிபதி அவாங் கெரிஸ்னாடா அவாங் மஹ்முட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக தலா இரு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
கோலசிலாங்கூர், கம்போங் பாரு தோட்ட தமிழ்ப்பள்ளி மற்றும் பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அவற்றின் எல்பிஎஸ் வாரியத்திடமிருந்து பெற்று மோசடி புரிந்ததாக இந்த இரு நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதிக்கும் டிசம்பர் 7 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் கோலசிலாங்கூர், கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் எல்பிஎஸ் வாரியத்தை நம்பவைத்து து 8 லட்சத்து 63 ஆயிரத்து 500 வெள்ளியை பெற்றதாக அவர்களுக்கு எதிராக முதல் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அதே ஆண்டில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியின் எல்பிஎஸ் வாரியத்தை நம்பவைத்து 3 லட்சத்து 81 ஆயிரத்து 500 வெள்ளியை பெற்றதாக அவர்களுக்கு எதிராக இரண்டாவது குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்ப்பள்ளிகளின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குத்தகையாளர்கள் தாங்களே என்று கூறிக்கொண்டு,எல்பிஎஸ் வாரியத்தை நம்பவைத்து, ஏமாற்றியதாக அந்த இருவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 420 ஆவது பிரிவின் கீழ் அந்த இரு நபர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
எனினும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து அந்த இயக்குநரும், ஆலோசகரும் விசாரணை கோரியதால் அவர்களை ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 50 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், அவர்களின் அனைத்துலக கடப்பிதழை முடக்கியது.
தவிர, ஒவ்வொரு மாதமும் முதலாவது வாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மின் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த இயக்குநருக்கும், நிறுவன ஆலோசகருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.