மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அங்கே கூறிய கருத்துக்கள், சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேற்குலக நாடுகள் இதற்குப் பொங்கி எழுந்துள்ளன.
வடகொரிய நாட்டின் அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். 39 வயதான கிம் ஜாங் உன் வடகொரியாவை விட்டு வெளியே வருவது ரொம்பவே அரிது. அதேபோல வடகொரியாவுக்கும் பெரும்பாலும் எந்தவொரு உலக தலைவர்களும் செல்ல மாட்டார்கள்.
இதனால் வடகொரியா எப்போதும் உலக நாடுகளில் இருந்து தனிமைப்பட்டே இருக்கும். அதுவும் கொரோனாவுக்கு பிறகு நிலைமை இன்னும் மோசமானது. இதற்கிடையே மிகவும் அரிய நிகழ்வாக அதிபர் கிம் ஜாங் வடகொரியாவை விட்டு வெளியே சென்றுள்ளார்.
ரஷ்யா பயணம்: வடகொரிய அதிபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக உருவாக்கப்படும் பச்சை நிற ரயில் அவர் மாஸ்கோ சென்றார். குண்டு துளைக்காத இந்த ரயிலில் சுமார் 40 மணி நேரம் பயணித்து அவர் மாஸ்கோ சென்றடைந்தார். கொரோனா பரவல் ஆரம்பித்த பிறகு, கடந்த 4 ஆண்டுகளில் கிம் ஜாங் வெளிநாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீது கிம் ஜாங் ரஷ்யா சென்றுள்ளார்.
மாஸ்கோ சென்ற கிம் ஜாங் நேற்றைய தினம் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்தார். சைபீரியாவில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 4 மணி நேரம் நீட்டித்தது. கிம் ஜாங் வருகையை முன்னிட்டு உட்சபட்ச பாதுகாப்பு முன்னேற்பாடுகள் போடப்பட்டிருந்தது. இந்த மீட்டிங்கில் கிம் ஜாங் அமரும் சேரை கூட அந்நாட்டு அதிகாரிகள் பல முறை பரிசோதனை செய்தனர். இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு குறித்த காட்சிகளையும் ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.