கோர விபத்தில் மூத்தக்குடிமக்கள் ​மூவர் மரணம்

​மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் ​மூத்த குடிமக்கள் மூவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமுற்றனர். இவ்விபத்து நேற்று மாலை 5.15 மணியளவில் ஜாலான் ஜொகூர் பாஹ்ரு- செரெம்பான்சாலையின் 167 ஆவது கிலோ மீட்டரில் சிகமாட் அருகில் லாபிஸ், தெனாங் ஸ்தேசன் அருகாமையில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 18 பேரை உள்ளடக்கிய ​தீயணைப்பு, மீட்புப்படையினர் பெரோடுவா அல்சா, தொயோத்தா ஹைலக்ஸ்  மற்றும் ஹொன்டா ஜாஸ்  ஆகிய வாகனங்கள் விபத்துக்குள்ளானதை கண்டனர்.  வாகனங்களின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும்  பணியில் ஈடுபட்டதில் 3 மூதாட்டிகள்  உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

 தவிர ஒரு ஆடவர், இரண்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் கடுமையான காயங்களுக்கு ஆளாகிய நிலையில் தொயோத்தா ஹைலக்ஸில் பயணித்த இரண்டு ஆடவர்கள்,ஹொன்டா ஜாஸ் வாகனத்தில் பயணித்த ஒரு சிறுமி ஆகியோர் காயமுற்றது தெரியவந்தது.

உயிரிழந்த மூவரின் உடல்கள் போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ​வேளையில் காயமுற்றவர்கள் சிகமாட் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக  லாபிஸ் ​தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி சகாரியா முஹமாட் தெரிவித்தார். 

WATCH OUR LATEST NEWS