கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சுங்கை பூலோ அருகில் எல்மினா கத்ரி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய பீச்க்ராஃப் 1 இலகு ரக விமானத்தின் விபத்து தொடர்பான பூர்வாங்க விசாரணை அறிக்கையை போக்குவரத்து அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை காலையில் வெளியிட்டது.
அந்த அறிக்கையில் சம்பந்தப்பட்ட இரண்டு விமானிகளின் உடல் ஆரோக்கியம் குறித்து மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், விமானத்தின் இடிப்பாட்டுப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட ஆகக்கடைசியான 30 நிமிட குரல் பதிவு நாடாவின் உள்ளடக்கம் வெளியிடப்படவில்லை.
பத்து பேரின் உயிரை பறித்த இந்த கோர விமான விபத்தில் விமானத்தை செலுத்திய விமானி மற்றும் துணை விமானி உடல் ஆரோக்கியமாக இருந்துள்ளனர். போதுமான ஓய்வுக்குப் பின்னரே அவர்கள் அந்த விமானத்தை செலுத்தியுள்ளனர். அவர்களின் உடல் நிலையில் பிரச்னை இருந்ததாக கூறப்படுவதை போக்குவரத்து அமைச்சு மறுத்துள்ளது.
எனினும் அந்த 30 நிமிட உரையாடலின் உள்ளடக்கம், விபத்து தொடர்பான இறுதிக்கட்ட அளிக்கையில் மட்டுமே வெளியிட இயலும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.