மலேசிய இந்தியர்களை ஒரு வலிமைமிகுந்த சமூகமாக உருவாக்கும் நோக்கில் அவர்களை வழிநடத்தக்கூடிய – அவர்களின் பிரச்னையை தீர்க்கக்கூடிய ஓர் தளத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியர்களுக்கான ஒருங்கிணைப்பு இயக்கக்கூட்டம், நாளை அக்டோபர் 7 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சரித்திரம் வாய்ந்த கிள்ளான், லெட்சுமணா மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்நாட்டில் இயங்கும் இந்திய அரசியல் கட்சிகளும், பல இன கட்சிகளில் அடைக்கலமாகி இருக்கும் இந்திய தலைவர்களும் இந்திய சமுதாயத்தை முன்னேற்றுவதில் தோல்விக் கண்டு விட்டனர். எனவே மலேசிய இந்தியர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கே.பி.சாமி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்திற்கு மஇகா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ எஸ். சிவராஜ், மஇகா முன்னாள் தேசியத் துணைத் தலைவரான டான்ஸ்ரீ எஸ். சுப்பிரமணியத்தின் புதல்வர் டத்தோ சுந்தர், மஇகா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ கு. பத்மநாபன் புதல்வர் பிரசாந்த் பத்மநாபன் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
நாட்டில் இந்தியர்களை தளமாக கொண்டு செயல்படும் அரசியல் கட்சிகள், அரசு சாரா இயக்கங்கள் என அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, அரசாங்க ஆதரவுடன் இந்திய சமுதாயப் பிரச்னைகளை தீர்வு காண்பதற்கு இந்தியர்களுக்கு என்று அமைப்பை நிறுவும் நோக்கில் சமுதாய நலன் சார்ந்தவர்களுடன் கலந்லோசிக்கவும், ஒரு முடிவு எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுட்டுள்ள இக்கூட்டத்தில் அனைவரும் திரண்டு வருமாறு அதன் ஒருங்கிணைப்பாளர் கே.பி. சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.