பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை கொலை செய்ய 50 லட்சம் வெள்ளி சன்மானத்தை வழங்குவதாக அறிவித்த நபர், வேடிக்கைக்காக அவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.
டிக் டாக் மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்ட 34 வயது மதிக்கத்தக்க அந்த நபர், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, டிக் டோக்கை இப்போதுதான் பயன்படுத்த தொடங்கியதாகவும், சற்று வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற நோக்கில் வேடிக்கையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டதாக தமது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார் என்று ஐ.ஜி.பி. குறிப்பிட்டார்.
பிரதமரையும், அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்களையும் துப்பாக்கியினால் யாராவது சுட்டால் அவர்களுக்கு 50 லட்சம் வெள்ளி வெகுமதியாக வழங்குவதாக கிளந்தான், கோத்தா பாருவைச் சேர்ந்த அந்த நபர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணை முடிவடைந்த நிலையில் அந்த நபர் தற்போது போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.