மின்னியல் ஊடகங்களில் புதிய வரவாக, லட்சக்கணக்கான மக்களின் இன்றியமையாத பொழுதுபோக்காக மாறியுள்ள ‘டிக் டோக்’, ஊடகத்தைச் சரியான முறையில், தடத்தில் பயன்படுத்தினால் எந்த அளவிற்கு பிரபலமாக விளங்க முடியும், பலரின் மனங்களில் இடம்பிடிக்க முடியும் என்பதற்கு மகாலெட்சுமி பன்னீர்செல்வம் ஒரு சிறந்த உதாரணமாகும்.
சுமார் 7 வருடங்களாக மளிகைக்கடை வைத்து நடத்தி வரும் இவர் கோவிட் பெருந்தொற்று காலக்கட்டத்தில் மளிகைக் கடை வியாபாரத்தில் பெரும் நட்டத்தை எதிர் நோக்கிய போது தன் மகன் மூலம் டிக் டோக்கில் காலடி எடுத்து வைத்தார்.
2020 ஆம் ஆண்டு தொடங்கிய இவரின் டிக் டோக் கலைப்பயணம் 36,000 காணொளிகளை செய்து ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேல் கொண்ட பார்வையாளர்களை இதுவரையில் சேகரித்துள்ளன. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக பழக்கப்படுத்திக் கொண்ட இவர் காலப்போக்கில் இதனை நடனமாகவும் மாற்றி டிக் டோக்கில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தார்.
தமிழ் மீதான அளவற்ற மரியாதையினாலும் பற்றாலும் தமிழ்மலர், நண்பன் போன்ற தமிழ் நாளிதழ்களை வாங்கி மக்களுக்கு அன்றாடம் தலைப்பு செய்தியினையும் வாசித்து காட்டுவதை ஒரு சிறந்த பொழுதுபோக்காகவும் கொண்டிருக்கிறார் திருமதி மகாலெட்சுமி. சில சமயங்களில் செய்திகள் வாசித்து இலங்கை வானொலிக்கு அனுப்புவதும் உண்டு. இவருடைய சரளமான தமிழ் உச்சரிப்பு, ஆழமான தமிழ்மொழியைப் பார்த்தே பல மக்கள் கவர்ந்துள்ளனர்.
அதோடு நின்றுவிடாமல் மனவுலைச்சலில் இருக்கும் டிக் டோக் பார்வையாளர்களுக்குத் தன்னுடைய காணொளி பெரிதும் உதவும் என்பதற்காக பலதரப்பட்ட நகைச்சுவை வீடியோக்களையும் செய்து அதில் பதிவேற்றுவார். கவலை மறந்து சிலநிமிடங்கள் பார்வையாளர்களின் முகத்தில் மகிழ்ச்சியினை உணருவதற்கு தன் வலியையும், துன்பங்களையும் ஒத்தி வைத்து மக்களை சந்தோஷம் செய்வார்.
அன்றாட சமையல், சமூதாய நலன் கருதிய காணொளிகள் போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்ட இவர் தன் வியாபாரமும் தன் குடும்பத்தின் மேலும் அதீத அக்கறையும் நலனும் கொண்டவராகவும் திகழ்கிறார்.
டிக் டோக் மூலம் பல விளம்பரங்களையும் செய்து வருகிறார் திருமதி மகாலெட்சுமி. நகைக்கடை, துணிக்கடை போன்ற இடங்களில் இருந்து தனக்கு வரும் அழைப்பினைக் கொண்டு அவ்விடத்திற்கு சென்று விளம்பரம் செய்வது உண்டு. சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக மஸ்ஜிட் இண்டியாவில் ஒரு நகைக்கடை திறந்து வைத்த போது மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மறக்க முடியாத ஓர் அனுபமாக இருந்தது என்று நேர்காணலில் குறிப்பிட்டார்.
மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனப்பான்மையில் அண்மைய காலத்தில் ஶ்ரீ மூடாவில் நடந்த வெள்ளப் பெருக்கில் ஒரு கூட்டு முயற்சியினால் இவரால் இயன்ற உபயோக பொருட்களை வாங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று கொடுத்துள்ளார்.
இயற்கை மீதான அக்கறையினால் சுற்றுப்புற தூய்மையைப் பேணிக்காப்பதை குறித்து காணொளி செய்தும் இவர் பகிருவது உண்டு. கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் சிறந்த முறையில் காக்க முடியும். இயற்கை சார்ந்த செயல்களில் ஆர்வமுள்ள இவர் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் தனக்கென ஒதுக்கப்பட்ட தோட்டத்தில் ஒரு செடியை நட்டு வைப்பது வழக்கம்.
தம்முடைய சேவையை இனி வரும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆற்றவிருப்பதாகவும் கல்வி மிகவும் அவசியம் என்பதால் வசதி குறைந்த குழந்தைகளுக்கும் உதவ முன்வருவதாக திருமதி மகாலெட்சுமி தெளிவுப்படுத்தினார்.