புத்ராஜெயா,ஜன.5
தங்களின் வீட்டில் பணிபுரிந்த மூன்று இந்தோனேசியப் பணிப்பெண்களை கட்டாயத் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தியதுடன் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல், அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தொழில் அதிபரும், மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சம்மேளனமான மைக்கியின் முன்னாள் தலைவருமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மற்றும் அவரின் மனைவி புவான்ஸ்ரீ விவின் கென்னத் ஈஸ்வரன் ஆகியோருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பணிப்பெண்கள் சுரண்டப்ட்ட வழக்கு விசாரணை, திட்டமிட்டப்படி கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் காஜாங், Country Heights ஸில் உள்ள தங்களின் பங்களா வீட்டில் பணிபுரிந்த மூன்று இந்தோனேசியப் பெண்கள் வர்த்தக நோக்கில் 2017 ஆம் ஆண்டு மனித கடத்தல் சட்டத்தின் கீழ் சுரண்டப்பட்டது தொடர்பில் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரனும் அவரின் மனைவியும் கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம்ஆ ண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அந்த மூன்று பெண்களும் அந்த பங்களா வீட்டிலிருந்து சுவர் ஏறி, குதித்து தப்பித்து, இந்தோனேசிய தூகரத்தில் அளித்த புகார் அடிப்படையில் 62 வயதான கென்னத் ஈஸ்வரன் மற்றும் 67 வயதான அவரின் மனைவிக்கு எதிராக கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 15 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தின் கீழ் கென்னத் ஈஸ்வரன் தம்பதியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வழக்கின் பூர்வாங்க விசாரணை கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்குவதற்கு முன்னதாக அரசியல்மைப்பு சட்டம் தொடர்பாக எழுந்து சந்தேகத்திற்கு தீர்வு காண்பதற்கு இவ்வழக்கை கூட்டரசு நீதிமன்றுத்திற்கு கொண்டு செல்வதற்கு கென்னத் ஈஸ்வரன் வழக்கறிஞர்கள் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு விசாரணை நீதிபதி ரொஸ்ஸியனாத்தி அஹ்மாட் அனுமதி அளித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டின் தன்மையான சட்டத்தின் 12 ஆவது பிரிவு, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதா? இல்லையா? என்பது தொடர்பில் கென்னத் ஈஸ்வரன் தம்பதியரின் வழக்கறிஞர்கள் சட்ட அம்சங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இது தொடர்பாக ஐவர் அடங்கிய கூட்டரசு நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் , குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு நியாயமான விசாரணையும், சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பும் கிடைக்கும் என்றார்.
அதேவேளையில் மனித கடத்தல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் ஆதாரமாக பயன்படுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டம் அனுமதி அளிக்கிறது என்றார்.
இதன் தொடர்பில் கென்னத் ஈஸ்வரன் தம்பதியருக்கு எதிராக கொண்டு வரப்பட் மனித கடத்தல் வழக்கு திட்டமிட்டப்படி கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று தெங்கு மைமுன் துவான் மாட் தெரிவித்தார்.