ஜன.5
பெரிக்காத்தான் நேஷனலும், தமது தலைமையிலான பாஸ் கட்சியும் ஜனநாயக நடைமுறை மற்றும் அரசமைப்பு சட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தை மாற்றுவதற்காக காத்திருப்பதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
நடப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் கொள்முதல் கலாச்சாரத்தை பாஸ் கட்சியும், பெரிக்காத்தான் நேஷனலும் ஒரு போதும் கடைப்பிடிக்காது. மாறாக, நாட்டின் ஜனநாயக நடைமுறைக்கு ஏற்பவும், அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியும் நடப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கு சரியான தருணம் பார்த்து காத்திருப்பதாக ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்கட்சியினர் துபாய் நகர்வை முன்னெடுத்து இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் பதில் அளிக்கையில் அந்த மதவாத கட்சியின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை பாஸ் கட்சியும், பெரிக்காத்தான் நேஷனலில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.