60 லட்சம் வெள்ளி லஞ்சம், நால்வர் கைது

அலோர் ஸ்டார்,ஜன.5
60 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றது தொடர்பில் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு கால்பந்தாட்ட சங்கத்தின் இரண்டு பிரதிநிதிகள், ஒரு தலைமை செயல்முறை அதிகாரி உட்பட நான்கு பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் அந்த நால்வரும் நிறுத்தப்பட்டனர். அவர்களை விசாரணை செய்வதற்கு ஏதுவாக வரும் ஜனவரி 7 ஆம் தேதி வரை ​மூன்று தினங்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு எஸ்பிஆர்எம், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது. இந்த நால்வரும் சுமார் 60 லட்சம் வெள்ளி வரையில் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

40 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நால்வரும் நேற்று மாலையில் கெடா மாநில எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு மாநிலத்தில் கார் பந்தய ஓடுபாதையை நிர்மாணிப்பதற்காக குத்தகை​யும், அதனை பராமரிப்பதற்கான 5 ஆண்டு கால ஒப்பந்தத்தையும் பெற்றுத் தருவதாக கூறி, இந்த நால்வரும் கையூட்டு பெற்றதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS