கோலாலம்பூர்,ஜன.5
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பகாங்கிலிருந்து விருது பெற்றதாக கூறி, போலி டத்தோஸ்ரீ பட்டத்தை தனது பெயருக்கு முன் பயன்படுத்தி வந்த வர்த்தகர் ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டள்ளார்.
வேறு தரப்பினரிடம் சட்டவிரோதமாக பெறப்பட்டதாக கூறப்படும் டத்தோஸ்ரீ பட்டத்தை பகாங் அரச பேராளரிடம் பெற்றதைப்போல் தோற்றத்தை ஏற்படுத்தி வந்த 54 வயது ஹசிமி அப்துல் ஹமிட் என்ற அந்த வர்த்தகர் நீதிபதி அஸ்ருல் டாருஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
44 வயதுடைய மேம்பாட்டாளர் ஒருவருக்கு வழங்கிய கடிதத்தில் தனது பெயருக்கு முன்னாள் டத்தோஸ்ரீ பட்டத்தை அந்த வர்த்தகர் பயன்படுத்தியிருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. அவர் இக்குற்றத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி கோலாலம்பூர், Mont Kiara- வில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 5 லட்சம் வெள்ளி வரை அபராதம் அல்லது 5 ஆண்டு வரை சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் போலி விருது தடுப்பு குற்றவியல் சட்டம் 18 ஆவது பிரிவின் கீழ் அந்த வர்த்தகர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.